< Back
மாநில செய்திகள்
அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 178 பேருக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்கள் குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்தனர்.
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 178 பேருக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்கள் குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்தனர்.

தினத்தந்தி
|
23 Aug 2022 7:15 PM GMT

அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 178 பேருக்கு வீடு வழங்கப்பட்டது. அவர்கள் குலுக்கல் முறையில் வீடுகளை தேர்வு செய்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வேலூர் கோட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் பில்லனகுப்பத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் கட்டப்பட்டுள்ள 528 வீடுகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இந்த ்திட்டத்தில் குடியிருப்பில் வீடு தேவைப்படுவோர், தங்களுக்கு வீடுகள் இல்லை எனவும், மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள் உள்ளது எனவும் சான்றளிக்க வேண்டும். மேலும் ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய, மாநில அரசின் மானிய தொகை போக மீதமுள்ள பங்கு தொகையான ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் பயனாளிகள் செலுத்த வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

குலுக்கல் முறை

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் குலுக்கல் முறையில் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வேலூர் கோட்ட நிர்வாக பொறியாளர் ஜெகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் பாலமுரளிதரன், உதவி பொறியாளர் மோகன்சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கியது. ஒவ்வொரு பயனாளியாக அழைத்து வீடுகள் தேர்வு செய்யப்பட்டது.

ஒதுக்கீடு

இதுகுறித்து அலுவலர்கள் கூறுகையில், அனைவருக்கும் வீடுகள் திட்டத்தின் கீழ் 528 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி கொண்டதாகும். இதில் ஏற்கனவே 163 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நேற்று குலுக்கல் முறையில் வீடுகள் பெற பணம் செலுத்திய 183 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் 178 பேர் கலந்து கொண்டு தங்களுக்கான வீட்டினை குலுக்கல் முறையில் தேர்வு செய்தனர். மேலும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் கீழ்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த குலுக்கலில் பங்கேற்காத 5 பேருக்கு வீடு தேர்வு செய்வதற்கான குலுக்கல் நடைபெறும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்