< Back
மாநில செய்திகள்
நாகர்கோவிலில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 164 பேருக்கு அபராதம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவிலில் ஒரே நாளில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 164 பேருக்கு அபராதம்

தினத்தந்தி
|
19 Jun 2023 9:13 PM GMT

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 164 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அதே சமயம் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிய 3 ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் போக்குவரத்து விதிகளை மீறியதாக ஒரே நாளில் 164 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அதே சமயம் அதிக பள்ளி மாணவர்களை ஏற்றிய 3 ஆட்டோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போக்குவரத்து விதிமீறல்

நாகர்கோவில் மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று கோட்டார், கலெக்டர் அலுவலக சந்திப்பு, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், வடசேரி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும், வாகனத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டியவர்கள் என மொத்தம் 164 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சிலர் மீது வழக்குப்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் வடசேரி பஸ் நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியிருந்த 12 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்தந்த வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் (நோ பார்க்கிங்) நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், கார்கள், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆட்டோக்களுக்கு அபராதம்

இதற்கிடையே பள்ளிகளுக்கு ஆட்டோக்களில் அதிக குழந்தைகளை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே ஆட்டோ டிரைவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டிருந்தார். இந்தநிலையில் நேற்று நடந்த சோதனையில் அதிக குழந்தைகளை ஏற்றி சென்ற 3 ஆட்டோக்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அந்த ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து அதிக மாணவர்களை ஏற்றி வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உரிமமும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்