< Back
மாநில செய்திகள்
சென்னையில் 150 கிலோ குட்கா பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
மாநில செய்திகள்

சென்னையில் 150 கிலோ குட்கா பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

தினத்தந்தி
|
1 Dec 2023 11:05 PM GMT

சென்னையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

சென்னை,

தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா, மாவா போன்ற தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மற்றும் பதுக்கி வைத்திருப்போர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.

எனவே தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி (சென்னை மாவட்டம்) சதீஷ்குமார் உத்தரவின்பேரில் சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடந்தன. சென்னை எழும்பூர், புதுப்பேட்டை பகுதிகளில் அனைத்து பெட்டிக்கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என்.ராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட கடைகளை மூடி சீல் வைத்தனர். போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் வில்லிவாக்கம், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கொளத்தூர், பாரிமுனை உள்ளிட்ட இடங்களிலும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்டவற்றை விற்பனை செய்த 28 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 150 கிலோ அளவில் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்