< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்

தினத்தந்தி
|
16 Nov 2022 11:17 PM GMT

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றிருந்தனர்.

இந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் நடுக்கடலில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்தவர்களா அல்லது புதுக்கோட்டை, நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற முழு விவரம் இன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும் என்று கூறப்படுகின்றது.

மீனவரின் கண்ணில் காயம்

இந்த சம்பவத்திற்கு முன்னதாக ராமேசுவரத்திலிருந்து கடந்த 14-ந்தேதி அந்தோணியார் அடிமை என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி விரட்டினர்.

இதில் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஜான்சன் என்ற மீனவரின் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடரும் அத்துமீறல் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்