< Back
மாநில செய்திகள்
தலையில் கல்லைப்போட்டு 14 பவுன் நகையை பறித்து சென்றவருக்கு 10 ஆண்டு ஜெயில்
சிவகங்கை
மாநில செய்திகள்

தலையில் கல்லைப்போட்டு 14 பவுன் நகையை பறித்து சென்றவருக்கு 10 ஆண்டு ஜெயில்

தினத்தந்தி
|
21 April 2023 6:45 PM GMT

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பெண்ணின் தலையில் கல்லை போட்டு 14 தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்ப அளித்தது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பெண்ணின் தலையில் கல்லை போட்டு 14 தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்ப அளித்தது.

திருமணம் செய்து கொள்வதாக...

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை அடுத்த பள்ளபட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சரவணன்(வயது 35). இவர்கள் குடும்பத்துடன் கர்நாடக மாநிலத்தில் வசிக்கின்றனர். சரவணன் மட்டும் அவ்வப்போது இந்த பகுதிக்கு கூலி வேலைக்காக வந்து செல்வார். கடந்த 2015-ம் ஆண்டு அவர் மேலூரை அடுத்த கேசவன்பட்டி பகுதியில் வேலைக்கு வந்தபோது அந்த பகுதியில் வசித்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. தமிழ்ச்செல்வி ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர்.

சரவணன் தமிழ்ச்செல்வியிடம் தன் பெயரை தர்மா என்று கூறி பழகி உள்ளார். அத்துடன் தமிழ்ச்செல்வியை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி உள்ளார். இதை நம்பிய தமிழ்செல்வி, கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி தன்னிடம் இருந்த 14 பவுன் நகையுடன் சரவணனுடன் வந்து விட்டாடர்.

கல்லால் தாக்குதல்

இருவரும் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது, தமிழ்ச்செல்வியிடம் சிவகங்கை மாவட்டம் இடையமேலூரில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் தங்கி விட்டு விடிந்தவுடன் கோவிலில் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பிய தமிழ்ச்செல்வியும் சரவணனுடன் வந்துள்ளார். இடையமேலூரில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் அவர் தமிழ்ச்செல்வியுடன் உடலுறவு கொண்டு விட்டு அங்கு கிடந்த கல்லால் அவர் தலையில் தாக்கியுள்ளார். இதைதொடர்ந்து தமிழ்ச்செல்வி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அவர் இறந்துவிட்டதாக கருதிய சரவணன், தமிழ்செல்வி அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதற்கிடையில் அந்த வழியில் வந்தவர்கள் தமிழ்ச்செல்வியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்தார்.

10 ஆண்டு சிறை

இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். அவருக்கு ஆனந்தன் என்ற மற்றொரு பெயரும் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. கைது செய்யப்பட்ட சரவணன் மீது சிவகங்கையில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி சரத்ராஜ், குற்றம் சாட்டப்பட்ட சரவணனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்விக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்