< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
14 Nov 2022 10:07 PM GMT

சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடியே 68 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ 539 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 15 பேரை கைது செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த 6 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

உள்ளாடைக்குள்...

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அனைவரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர்கள், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

6 பேரிடம் இருந்தும் ரூ.2 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ 267 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

10 கிலோ தங்கம் பறிமுதல்

அதேபோல் அபுதாபியில் இருந்து வந்த 2 விமானங்களில் பயணம் செய்த 2 பேரின் உள்ளாடைகளில் மறைத்து வைத்து இருந்த ரூ.89 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 22 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

மேலும் துபாயில் இருந்து வந்த 4 பேரிடம் இருந்து 2 கிலோ 50 கிராம் தங்கமும், கொழும்பில் இருந்து வந்த 2 பெண்களிடம் இருந்து 730 கிராம் தங்க நகைகளும், பாங்காக்கில் இருந்து வந்த வாலிபரிடம் இருந்து 474 கிராம் தங்கமும் என ரூ.1 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 250 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் கடந்த 2 நாளில் நடத்திய சோதனைகளில் ரூ.4 கோடியே 68 லட்சத்து 97 ஆயிரம் மதிப்புள்ள 10 கிலோ 539 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 15 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்