< Back
மாநில செய்திகள்
சரக்கு வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

சரக்கு வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
9 Sep 2023 7:07 PM GMT

சரக்கு வேனில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் டிரைவரை கைது செய்தனர்.

வாகன சோதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்கின்றனர். இதேபோல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது. மேலும் ரகசிய தகவலின் அடிப்படையில் மூட்டைகளில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருக்கும் இடத்தை அறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் திருமயம் அருகே முனசந்தை, தெப்பக்குளம் அருகே நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில் 22 மூட்டைகளில் ரேஷன் அரிசியை கடத்த முயன்றது தெரியவந்தது. அதில் மொத்தம் 1 டன் 100 கிலோ எடை அளவில் ரேஷன் அரிசி இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சரக்கு வேனை ஓட்டி வந்த டிரைவரான புதுப்பட்டியை சேர்ந்த பெரியசாமியை (வயது 30) போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்