< Back
மாநில செய்திகள்
1 கிலோ மத்தி மீன் ரூ.100-க்கு விற்பனை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

1 கிலோ மத்தி மீன் ரூ.100-க்கு விற்பனை

தினத்தந்தி
|
14 Sep 2023 8:04 PM GMT

ஆவணி அமாவாசையையொட்டி கும்பகோணத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் வராததால் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆவணி அமாவாசையையொட்டி கும்பகோணத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் வராததால் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.

மீன்மார்க்கெட்

கும்பகோணம் நால்ரோடு பகுதியில் மீன்மார்க்கெட் உள்ளது. இந்த மீன்மார்க்கெட்டில் 25-க்கும் மேற்பட்ட மீன்கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நாகை, அதிராம்பட்டினம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய கடலோர பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் கடல் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதற்காக விசைப்படகுகள், பைபர்படகுகள் எனப்படும் சிறியவகை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் சென்று பல நாட்கள் அங்கேயே தங்கி மீன்களை பிடித்து வருகின்றனர்.

மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக லாரியில் கொண்டு வரப்படுகிறது.

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளில் வளர்க்கப்படும் நாட்டு மீன்களும் விற்பனைக்காக வருகின்றன. ஆவணி அமாவாசை நாளான நேற்று கும்பகோணத்திற்கு வழக்கத்தை விட குறைந்த அளவிலேயே மீன்கள் வந்தது. ஆனாலும் விலை சாதாரணமாகவே இருந்தது. செங்காலா மீன் ரூ.150-க்கும், கெண்டை மீன் ரூ.130-க்கும், உயிர் கெண்டை ரூ.180-க்கும் விற்பனையானது.

அமாவாசை நாள்

விறால் மீன் ரூ.300 முதல் ரூ.400-க்கும், நண்டு ரூ.300-க்கும், இறால் ரூ.300-க்கும், கொடுவா மீன் ரூ.400-க்கும், மத்தி மீன் ரூ.100-க்கும், ஜிலேபி மீன் ரூ.120-க்கும் விற்பனையானது. இதுகுறித்து மீன் வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணத்திற்கு வழக்கமாக 3 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். பெரும்பாலும் நாகை மாவட்டத்தில் உள்ள மீன்பிடி பகுதிகளில் இருந்து தான் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. மீன்கள் வரத்து எப்போதும் போல தான் உள்ளது.

உள்ளூர் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து மீன்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. பாதுகாத்து விற்பனை செய்ய முடியாததால் அன்றைய விற்பனைக்கு மட்டும் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். மேலும் இன்று (நேற்று) ஆவணி அமாவாசை நாள் என்பதால் பொதுமக்கள் பெரும்பாலும் மீன்கள் வாங்க வரவில்லை. மீன்கள் வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும் வியாபாரிகள் பல்வேறு இடங்களில் சிறு, சிறு கடைகள் அமைக்கப்பட்டு விட்டதால் மொத்த விற்பனையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்