< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
10 Oct 2022 10:15 PM GMT

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 36 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 116 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் மேத்யூ ஜோல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள், விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அதில் அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.30 லட்சத்து 32 ஆயிரம் மதிப்புள்ள 690 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ரூ.1¼ கோடி தங்கம்

துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த முகமது பசலின் பஹில் (30) என்பவரை சோதனை செய்தபோது, அவரது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.65 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 486 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் வந்த சிவகங்கையை சேர்ந்த வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ.30 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள 685 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உடைமைகளை சோதனை செய்தபோது 3 தங்க காப்பு, ஒரு மோதிரத்தை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 255 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் 4 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 36 லட்சத்து 92 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 116 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்