< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்

தினத்தந்தி
|
11 July 2022 7:10 PM GMT

சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 80 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 4 பேரை கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை அசோக் நகரைச் சேர்ந்த சாகுல் அமீது (வயது 30), திருச்சியை சேர்ந்த ரசீத் (28), மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை மண்ணடியை சேர்ந்த அருண் பாண்டியன் (30), துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பழனிசாமி (32) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.1¼ கோடி தங்கம் பறிமுதல்

அதிகாரிகளிடம் 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. பின்னர் 4 பேரையும் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அப்போது அவர்களது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

மேலும் துபாயில் இருந்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த பழனிசாமி அணிந்து இருந்த காலணியில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடு்த்து 4 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடியே 38 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 80 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்