< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
11 Dec 2022 6:39 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெரு நாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி சிறுவர், சிறுமிகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய் பரவும் அபாயம்

அரியலூர்-ஜெயங்கொண்டம் சாலையில் அமைந்துள்ள அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதியின் வெளிப்புறத்தில் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்கால் முறையாக அமைக்கப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இன்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அகற்றப்பட்ட வேகத்தடைகள்

அரியலூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறும் இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் முதல்-அமைச்சரின் வருகையொட்டி இந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த இடங்களில் வேகத்தடைகள் அகற்றப்படாமல் உள்ளதால், இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாத வேகத்தடைகள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி-ஸ்ரீபுரந்தான் சாலையில் ஆங்காங்கே விபத்துகள் நடக்கும் பகுதிகளில் விபத்துகளை தடுக்கும் வகையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது இந்த வேகத்தடைகளில் பூசப்பட்டுள்ளது வெள்ளைவர்ண கோடுகள் காலப்போக்கில் மறைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூச வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், குணமங்கலத்தில் இருந்து அரக்கட்டளை கிராமம் வரை செல்லும் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள தார்சாலை கடந்த ஓராண்டுக்கு மேலாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்