< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களின் பிரச்சினை நிரந்தர தீர்வு
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களின் பிரச்சினை நிரந்தர தீர்வு

தினத்தந்தி
|
15 Nov 2022 6:38 PM GMT

தமிழக மீனவர்களின் பிரச்சினை நிரந்தர தீர்வு காண வேண்டும் என தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்திற்கு வந்த ராமநாதபுரம் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண எங்கள் கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் இருவரும் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 5-ந் தேதி அன்று கூட ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 15 மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல் மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் உடனடியாக மீட்டு கொண்டு வரவும் மத்திய அரசு இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்தின் உத்தரவின் பேரிலும் பொருளாளர் பிரேமலதா வழிகாட்டுதலுடன் விரைவில் ராமேசுவரத்தில் தே.மு.தி.க. சார்பில் மீனவர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் ராமேசுவரம் நகரசெயலாளர் முத்து காமாட்சி, மண்டபம் ஒன்றிய செயலாளர் திலிப்காந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்