< Back
சிறப்புக் கட்டுரைகள்
சொந்த செலவில் குளம் வெட்டியவர்...!
சிறப்புக் கட்டுரைகள்

சொந்த செலவில் குளம் வெட்டியவர்...!

தினத்தந்தி
|
12 March 2023 4:18 PM GMT

கர்நாடகாவைச் சேர்ந்த விவசாயியான காமெகவுடா, மாண்டியா மாவட்டத்திலுள்ள தாசனதோடி கிராமத்தை பசுமையாக்க 14 குளங்களை வெட்டியுள்ளார்.

அரசின் உதவியின்றி தன் சொந்த சேமிப்பானரூ.15 லட்சத்தை செலவழித்து குளங்களைக் கட்டி நீர்வளம் பெருக்கியுள்ளார் காமெகவுடா.

நாற்பதாண்டுகளுக்கு முன்பு குந்தினபேட்டா மலைப்பகுதி மழைபொய்த்து பசுமை இழந்துபுற்கள் வெயிலில் பொசுங்கிப்போக காமெகவுடா வாழ்வாதாரம் குலைந்து தவித்துப்போனார்.

மலையையும், மழையையும் நம்பி வாழ்ந்த விலங்குகளும் பறவைகளும் உணவின்றி தவிக்க காமெகவுடா, அரசுக்கு மனுப்போடாமல் கையிருப்பைக் கரைத்து குளம் வெட்டத்தொடங்கினார். பதினான்கு குளங்களில் நீர் தேக்கத்தினால் மலை பசுமை சூழ்ந்து அழகாகியுள்ளதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

கண்களுக்கு அறுவை சிகிச்சை செய்ததால் சில காலம் குளம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு முழுக்கு போட்டிருந்தார். அந்தசமயத்திலும் ''கண்களை மூடியிருந்தாலும் இப்பகுதியை தெள்ளத்தெளிவாக என்னால் அடையாளம் காணமுடியும். தினசரி இக்குளங்களைக் காண்பதே எனக்கு மகிழ்ச்சி தருகிறது" என்று குளங்களோடு ஐக்கியமாகி இருந்தவர், இப்போது இவ்வுலகில் இல்லை. ஆம்..! கடந்த வருடம் இறந்துவிட்டார்.

மேலும் செய்திகள்