< Back
சிறப்புக் கட்டுரைகள்
தங்கத்தில் முதலீடு: தெரிந்து கொள்ள வேண்டியவை
சிறப்புக் கட்டுரைகள்

தங்கத்தில் முதலீடு: தெரிந்து கொள்ள வேண்டியவை

தினத்தந்தி
|
25 Oct 2022 3:16 PM GMT

தங்கத்தில் முதலீடு செய்தால் எந்த வகையிலும் பண நஷ்டம் ஏற்படாது. சாதாரண மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் போலவே ‘கோல்டு மியூச்சுவல் பண்ட்’ திட்டங்களும் அமைந்திருக்கின்றன.

பண்டைய காலம் முதலே தங்கம் விலைமதிப்பற்ற உலோகமாக விளங்குகிறது. உலக அளவில் நிதி சந்தைகளை நிர்வகிக்கும் வல்லமை கொண்டதாகவும் இருக்கிறது. எத்தகைய நெருக்கடியான பொருளாதார சூழலின்போதும் தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் இருக்காது. இதனால்தான் தங்கம் மதிப்பு மிக்க பொருளாக விளங்குகிறது. கரன்சி நோட்டுகளை விட சிறந்ததாக கருதப்படுகிறது. தங்கத்தில் முதலீடு செய்தால் எந்த வகையிலும் பண நஷ்டம் ஏற்படாது.

கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டிருக்கும் அபரிமிதமான உயர்வே அதற்கு சாட்சி. 2002-ம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.4,990. இப்போது (2022) 10 கிராம் தங்கம் 52 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. வருடந்தோறும் சராசரியாக 12.5 சதவீதம் வரை தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த வழியில் முதலீடு செய்வது சிறந்தது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

1. தங்கம் வாங்குதல்:

அழகிய டிசைன்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் தங்க நகைகளை வாங்கி அணிவதற்குத்தான் பெண்கள் விரும்புவார்கள். ஆனால் முதலீடு நோக்கத்திற்காக வாங்க விரும்பினால் தங்க நாணயம் அல்லது தங்க கட்டிக்களை தேர்ந்தெடுப்பதுதான் சரியானது. ஏனெனில் தங்க நகைக்கு அதன் விலையுடன் கூடுதலாக செய்கூலி, சேதாரம் போன்றவை சேர்க்கப்படும். நகையின் விலையை விட கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். பின்னாளில் மறு விற்பனை செய்தால் அந்த தொகையை திரும்ப பெற சாத்தியமில்லை.

2. டிஜிட்டல் தங்கம்:

முதலீட்டு நோக்கங்களுக்கு டிஜிட்டல் தங்கம் முறையையும் தேர்ந்தெடுக்கலாம். ஆன்லைன் வழியே தங்கத்தை வாங்கும்போது அது உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். ஆனால் அந்த தங்கத்தை பார்க்க முடியாது. அது உங்கள் கணக்கில் இருக்கிறது என்பது மட்டும் உறுதி செய்யப்படும். அதனை நீங்கள் எந்த நேரத்திலும் பணமாக மாற்ற முடியும். டிஜிட்டல் தங்கம் வாங்குவதற்கு ஏராளமான இணைய தளங்கள் உள்ளன. செல்போன்களில் அப்ளி கேஷன்களும் இருக்கின்றன. ஒருசில வங்கிகள், நகைக்கடைகளிலும் டிஜிட்டல் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் சாதக, பாதகங்களை தெரிந்து கொண்டு டிஜிட்டல் தங்கம் வாங்குவது நல்லது.

3. மியூச்சுவல் பண்ட்

சாதாரண மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் போலவே 'கோல்டு மியூச்சுவல் பண்ட்' திட்டங்களும் அமைந்திருக்கின்றன. ஒரே வித்தியாசம் என்னவென்றால் தங்கத்தை நேரடியாக வாங்குவதில்லை. மறைமுகமாக தங்க நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்யப்படும். கோல்டு மியூச்சுவல் பண்ட் சிறந்த திட்டமாகவே பார்க்கப்படுகிறது. ஓரளவு லாபம் கொடுக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.

4. தங்க பத்திரங்கள்:

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் தங்க பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இங்கேயும், நீங்கள் நேரடியாக தங்கத்தை வாங்குவதில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு பத்திரத்திலும் வாங்கும் தங்கத்தின் மதிப்பு குறிப்பிடப்படுகிறது. இந்த பத்திரங்களுக்கு வருடந்தோறும் வட்டியும் வழங்கப்படுகிறது. சந்தையின் மதிப்புக்கு ஏற்ப விற்பனை செய்து கொள்ளலாம். எனினும் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறும் வழியும் உண்டு. லாபம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை, 'ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை என்று நினைப்பவர்களுக்கு தங்க பத்திரங்கள் சிறந்த முதலீட்டு திட்டமாக கருதப்படுகிறது. பங்கு சந்தை ஏற்ற, இறக்கம், மந்த நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு சரியான திட்டங்களை தேர்வு செய்வது நல்லது.

மேலும் செய்திகள்