< Back
மும்பை
வாஷியில் தனியார் பள்ளி கழிப்பறையில் மாணவி மர்ம சாவு - போலீசார் விசாரணை
மும்பை

வாஷியில் தனியார் பள்ளி கழிப்பறையில் மாணவி மர்ம சாவு - போலீசார் விசாரணை

தினத்தந்தி
|
16 July 2023 7:15 PM GMT

வாஷியில் உள்ள தனியார் பள்ளி கழிப்பறையில் மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

வாஷியில் உள்ள தனியார் பள்ளி கழிப்பறையில் மாணவி மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிப்பறை சென்ற மாணவி

நவிமும்பை கோபர்கைர்னே பகுதியை சேர்ந்த சிறுமி முக்தா கதம் (வயது11). இவள் வாஷியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தாள். நேற்று முன்தினம் வழக்கம்போல் காலை 10 மணி அளவில் பள்ளிக்கு சென்றாள். பள்ளி இடைவேளையின் போது மாணவி முக்தா கதம் 3-வது மாடியில் இருந்த கழிவறைக்கு சென்றாள். வெகுநேரமாகியும் மாணவி வகுப்பறைக்கு திரும்பாததால் வகுப்பாசிரியர் மற்றும் பள்ளி ஊழியர்கள் கழிப்பறைக்கு சென்று பார்த்தனர். கழிவறை அறையின் கதவு உள்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. தட்டிப்பார்த்தும் உள்ளே இருந்து பதில் எதுவும் வராததால் துப்புரவு பணியாளர்கள் மூலம் கதவை மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.

மாணவி மர்மச்சாவு

அங்கு மாணவி முக்தா கதம் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவளை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் மாணவி முக்தா கதம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த வாஷி போலீசார் அங்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து மாணவியின் மர்ம சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்