மும்பை, புனேயில் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.
|மும்பை, புனேயில் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மும்பை,
மும்பை, புனேயில் பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பிபர்ஜாய் புயல்
மராட்டியத்தில் நடப்பு மாதம் முதல் தொடர்ச்சியாக 4 மாதம் தென்மேற்கு பருவமழை காலம் ஆகும். தற்போது பிபர்ஜாய் புயல் காரணமாக பருவமழை தாமதமாகி வருகிறது. ஏற்கனவே கேரளாவில் பருவமழை தொடங்கி இருந்தாலும், மராட்டியத்தில் பருவமழைக்கான வாய்ப்பு கூடி வரவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை குஜராத் மாநிலத்தில் பிபர்ஜாய் புயல் கரையை கடந்தது. இதன் காரணமாக மராட்டிய கடலோர பகுதிகளான ஓரிரு இடங்களில் லேசான மழையுடன் பலத்த காற்று வீசியது.
நாளை தொடங்க வாய்ப்பு
இந்த நிலையில் மும்பை மற்றும் புனேயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 22-ந் தேதிக்குள் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. பருவமழை தாமதம் ஆவதால் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் நாளுக்கு நாள் அதிரடியாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.