
தேசியவாத காங்கிரசை உடைக்க பா.ஜனதா தீவிரமாக இருந்தது தெரியும் அஜித்பவார் இப்படி செய்வார் என்று தகவல் கிடைக்காமல் போய் விட்டது - சரத்பவார் பேரன் பேட்டி

பா.ஜனதா கட்சியை உடைக்க தீவிரமாக இருந்தது தெரியும், ஆனால் அஜித்பவார் இப்படி செய்வார் என தெரியாது என சரத்பவாரின் பேரன் கூறியுள்ளார்.
மும்பை,
பா.ஜனதா கட்சியை உடைக்க தீவிரமாக இருந்தது தெரியும், ஆனால் அஜித்பவார் இப்படி செய்வார் என தெரியாது என சரத்பவாரின் பேரன் கூறியுள்ளார்.
நினைத்து பார்க்கவில்லை
அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்று அதிர்ச்சி அளித்து உள்ளார். அவருடன் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் மந்திரியாக பதவி ஏற்று உள்ளனர். சரத்பவாரின் மூத்த அண்ணன் அப்பாசாகேப் பவாரின் பேரனும், எம்.எல்.ஏ.வுமான ரோகித் பவார் கூறியதாவது:- நான் சரத்பவாருடன் உறுதியாக இருக்கிறேன். அஜித்பவார் பா.ஜனதா கூட்டணியில் இணைவார் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை. இது தொடர்பான தகவல் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் தேசியவாத காங்கிரசை உடைப்பதில் பா.ஜனதா தீவிரமாக இருந்தது. அது எங்களுக்கு தெரியும்.
தனிப்பட்ட உதவி
தற்போது நடப்பதை எல்லாம் பாா்க்கும் போது, என்னை போன்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து தவறு செய்துவிட்டோமோ என தோன்றுகிறது. அஜித்பவார் எனக்கு தனிப்பட்ட முறையிலும் உதவி செய்து இருக்கிறார். ஆனால் அரசியல் ரீதியாக நாங்கள் கட்சியின் தலைவர் சரத்பவாருடன் உள்ளோம். போராட்டம், விடாமுயற்சிக்கான வரலாறு மராட்டியத்துக்கு உள்ளது. அதை நாங்கள் தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.