< Back
மும்பை
கிரேன் விபத்தில் பலியான கிருஷ்ணகிரி என்ஜினீயர் குறித்து உருக்கமான தகவல்கள்
மும்பை

கிரேன் விபத்தில் பலியான கிருஷ்ணகிரி என்ஜினீயர் குறித்து உருக்கமான தகவல்கள்

தினத்தந்தி
|
1 Aug 2023 8:15 PM GMT

கிரேன் விபத்தில் பலியான கிருஷ்ணகிரி என்ஜினீயர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

மும்பை,

கிரேன் விபத்தில் பலியான கிருஷ்ணகிரி என்ஜினீயர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ஜினீயர்

தானே மாவட்டத்தில் பாலம் கட்டும் பணி நடந்து வந்தது. அப்போது கிரேன் அறுந்து விழுந்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த சந்தோஷ், கண்ணன் உள்பட மொத்தம் 20 பேர் பலியானார்கள். பலியான சந்தோஷ்(வயது36) கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஆவார். கிருஷ்ணகிரி போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர். அவரது தந்தை இளங்கோ. என்ஜினீயரான சந்தோசிற்கு திருமணம் ஆகி ரூபி என்ற மனைவியும், 5 வயதில் ஆத்விக் என்ற மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

பெரும் சோகம்

சந்தோஷ் கட்டுமான துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக தனியார் நிறுவனம் ஒன்றில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் மும்பையை அடுத்த தானேவில் பாலம் கட்டும் பணியின்போது கிரேன் அறுந்து விழுந்ததில் சந்தோஷ் பரிதாபமாக இறந்துள்ளார். சந்தோஷ் உயிரிழந்த தகவலறிந்ததும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். தொடர்ந்து அவர்கள் சந்தோஷின் உடலை தாமதமின்றி, விமானம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர உதவுமாறு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னைக்கு இடமாற்றம்

இதுதொடர்பாக சந்தோஷின் குடும்பத்தினர் கூறியதாவது:- வி.எஸ்.எல். கட்டுமான நிறுவனத்தில் 12 ஆண்டுகளாக சந்தோஷ் பணியாற்றி வந்தார். கடந்த 3 ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றி வந்தவர், தமிழகத்திற்கு இடமாற்றம் கேட்டு வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அந்நிறுவனத்தினர், தமிழகத்திற்கு சந்தோஷை இடமாற்றம் செய்தனர். ஒரு மாதம் கழித்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் அவர் பணியில் சேர இருந்தார். இவ்வாறான நிலையில், சந்தோஷ் நேற்று நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.

மேலும் செய்திகள்