< Back
மும்பை
கட்டுமான அதிபரிடம் போலி தங்க காசுகளை கொடுத்து ரூ.3 கோடி மோசடி- 3 பேர் கைது
மும்பை

கட்டுமான அதிபரிடம் போலி தங்க காசுகளை கொடுத்து ரூ.3 கோடி மோசடி- 3 பேர் கைது

தினத்தந்தி
|
24 July 2022 12:12 PM GMT

கட்டுமான அதிபரிடம் போலி தங்ககாசுகளை கொடுத்து ரூ.3 கோடி மோசடி செய்த 3 பேரை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

வசாய்,

கட்டுமான அதிபரிடம் போலி தங்ககாசுகளை கொடுத்து ரூ.3 கோடி மோசடி செய்த 3 பேரை குஜராத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ரூ.3.12 கோடி

பால்கர் மாவட்டம் தப்சேரி கிராமத்தை சேர்ந்த 40 வயது கட்டுமான அதிபரை, கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி 2 பேர் அணுகினர். இதில் தாங்கள் கூலி தொழிலாளிகள் எனவும் குழாய் பதிக்கும் பணியில் இருந்த போது தங்ககாசுகள் அடங்கிய புதையல் தங்களுக்கு கிடைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும் தாங்கள் வைத்திருந்த 2 தங்ககாசுகளை கட்டுமான அதிபரிடம் காண்பித்தனர். இதனை வாங்கி பார்த்த அவர் நகைக்கடையில் கொடுத்து சோதனை செய்தார்.

இதனை தொடர்ந்து அவர்களிடம் தங்ககாசுகள் வாங்க பேரம் பேசப்பட்டது. இதில் ரூ.3 கோடியே 12 லட்சம் தருவதாக கட்டுமான அதிபர் அவர்களிடம் தெரிவித்தார்.

போலி தங்ககாசுகள்

இதையடுத்து சக்வார் கிராமம் அருகே பணத்தை அவர்களிடம் கொடுத்து தங்ககாசுகளை கட்டுமான அதிபர் பெற்றுக்கொண்டார். இதன்பின்னர் வீட்டிற்கு வந்து தங்ககாசுகளை பரிசோதனை செய்ததில், அவை அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த கட்டுமான அதிபர் இது பற்றி மிராபயந்தர்-வசாய்விரார் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வந்தனர். இதில், அடையாளம் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் குஜராத் மாநிலம் வதோராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

3 பேர் கைது

இதன்பேரில் தனிப்படை போலீசார் குஜராத் மாநிலம் சென்று மோசடி கும்பலை சேர்ந்த 3 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் கிசான் சலாத், ஹரிபாய் சலாத் மற்றும் மணிஷ் ஷா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 18 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் 3 பேரையும் பால்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-------------

மேலும் செய்திகள்