< Back
பெங்களூரு
ரெயில்வே ஊழியரின் மனைவியை கொன்று நகைகள் கொள்ளை
பெங்களூரு

ரெயில்வே ஊழியரின் மனைவியை கொன்று நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
16 July 2022 5:20 PM GMT

கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டையில் ரெயில்வே ஊழியரின் மனைவியை கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கோலார் தங்கவயல்:

கொலை-கொள்ளை

கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை பகுதியில் உள்ள பழைய தபால் அலுவலக சாலையில் உள்ள பச்சப்பா தெருவை சேர்ந்தவர் சேகரன். ரெயில்வே ஊழியர். இவரது மனைவி சுலோச்சனா (வயது 57). இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 7.30 மணி அளவில் அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.

அப்போது அவரைபின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள், சுலோச்சனாவின் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனை சுதாரித்து கொண்ட சுலோச்சனா, தங்கச்சங்கிலியை கெட்டியாக பிடித்து கொண்டார். அப்போது மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்திவிட்டு சுலோச்சனா அணிந்திருந்த தங்கச்சங்கிலியை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் பலத்த காயமடைந்த சுலோச்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

3 தனிப்படை அமைப்பு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆண்டர்சன்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொைலயான சுலோச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சுலோச்சனாவை கத்தியால் குத்திவிட்டு மர்மநபர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். இதையடுத்து மர்மநபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆண்டர்சன்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்