< Back
தேசிய செய்திகள்
காதலியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. ஓட்டலில் நடந்த கொடூரம்
தேசிய செய்திகள்

காதலியை கொன்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த காதலன்.. ஓட்டலில் நடந்த கொடூரம்

தினத்தந்தி
|
2 Dec 2023 9:41 AM GMT

பவுசியாவும், ஆசிக்கும்16 வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுள்ளனர். இதனால் போக்சோ வழக்கில் ஆசிக் கைது செய்யப்பட்டார்.

சென்னை:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த பவுசியா (வயது 20) என்ற இளம்பெண் சென்னை குரோம்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். குரோம்பேட்டையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்தார். இவரும், கேரளாவைச் சேர்ந்த ஆசிக் (வயது 20) என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் இருவரும் அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த ஆசிக், காதலி பவுசியாவை கொலை செய்துள்ளார். பின்னர் அதை போட்டோ எடுத்து தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆக வைத்துள்ளார். இதைப் பார்த்த பவுசியாவின் தோழிகள் அந்த ஓட்டல் அறைக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு பவுசியா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

போலீசார் ஓட்டலுக்கு வந்து பவுசியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து தப்பிச் சென்ற ஆசிக்கை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகின. பவுசியாவும், ஆசிக்கும் 16 வயதிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்றுள்ளனர். பவுசியாவின் 16 வயதில் திருமணம் நடந்ததால் போக்சோ வழக்கில் ஆசிக்கை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். குழந்தையை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த ஆசிக், அடிக்கடி பவுசியாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பலமுறை இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் நேற்றும் சண்டை நடந்திருக்கிறது.

ஆசிக் வேறு சில பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை தனது செல்போனில் வைத்திருந்தார். நேற்று ஓட்டலில் தங்கியிருந்தபோது அந்த படங்களை பவுசியா பார்த்ததையடுத்து இருவருக்குமிடையே சண்டை தீவிரமடைந்துள்ளது. அப்போது பவுசியாவை ஆசிக் டி-ஷர்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்