< Back
தேசிய செய்திகள்
காதலனும், முன்னாள் காதலனும் ஒன்றாக வந்தபோது... இளம்பெண் எடுத்த முடிவு?
தேசிய செய்திகள்

காதலனும், முன்னாள் காதலனும் ஒன்றாக வந்தபோது... இளம்பெண் எடுத்த முடிவு?

தினத்தந்தி
|
19 Jan 2023 1:54 PM GMT

மத்திய பிரதேசத்தில் காதலனும், முன்னாள் காதலனும் ஒன்றாக வீட்டுக்கு வந்ததில் இளம்பெண் அதிர்ச்சி முடிவை எடுத்து உள்ளார்.


போபால்,


மத்திய பிரதேசத்தின் பெடல் மாவட்டத்தில் போர்தேஹி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம்பெண், ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அந்த காதலரை, இளம்பெண்ணின் முன்னாள் காதலர் சந்தித்து உள்ளார். இதில், தன்னை காதலித்த அந்த பெண் தொடர்ந்து பேசாமல் தவிர்த்து வந்தது தெரிந்ததுடன், மற்றொரு புது காதலருடன் சுற்றி திரிந்த விவரம் அறிந்து முன்னாள் காதலர் ஆத்திரம் அடைந்து உள்ளார். அதன்பின் புது காதலரிடம் தன்னை பற்றி விளக்கி கூறியுள்ளார்.

இதனால், இளம்பெண்ணின் காதலர்களான இருவரும், ஆத்திரமடைந்தனர். அவர்கள் சிலரை கூட்டி கொண்டு காதலியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். இருவரும் ஒன்றாக வருவது அறிந்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்து உள்ளார். 5 பேர் கைகளில் ஆயுதம், கம்புகளுடன் சுற்றி வளைத்து உள்ளனர். காதலர்கள் இருவரும் காதலியிடம் உண்மையாக யாரை காதலிக்கிறாய் என கூறு? என்று கேட்டு துன்புறுத்தி உள்ளனர். பின்பு, அவரை அடித்து, தாக்கி உள்ளனர்.

அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்த பெண் வெளியே ஓடியுள்ளார். இவர்களும் துரத்தி உள்ளனர். இதனை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து உள்ளனர். அந்த பெண் வழியின்றி கிணறு ஒன்றில் குதித்து விட்டார்.

உடனே அருகே இருந்தவர்கள், உடனடியாக செயல்பட்டு, பெண்ணை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்து, அவரை மீட்டு, வெளியே கொண்டு வந்து காப்பாற்றி உள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதுபற்றி இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். காதலர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்