< Back
தேசிய செய்திகள்
உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி -  ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்
தேசிய செய்திகள்

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 25 பேர் பலி - ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல்

தினத்தந்தி
|
5 Oct 2022 5:09 AM GMT

உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

உத்தரகாண்ட், லால்தாங் பகுதியில் இருந்து பவுரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பிரோன்கால் பகுதிக்கு நேற்று பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. பிரோன்காலில் நடைபெறும் திருமண விழாவில் பங்கேற்பதற்காக 50-க்கும் மேற்பட்டவர் அதில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், மலைப்பாங்கான பகுதியில் இரவு 7.30 மணியளவில் பஸ் சென்றுகொண்டிருந்த போது சிம்ரி என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பள்ளத்தாக்கில் இருந்து 21 பேரை மீட்புப்படையினர் மீட்டுள்ளனர். இதில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உத்தரகாண்ட் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், " உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்." என்று அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்