< Back
தேசிய செய்திகள்
உ.பி.யில் அவலம்; கெட்ட ஆவியை வெளியேற்றுகிறேன் என கூறி இளம்பெண் பலாத்காரம்
தேசிய செய்திகள்

உ.பி.யில் அவலம்; கெட்ட ஆவியை வெளியேற்றுகிறேன் என கூறி இளம்பெண் பலாத்காரம்

தினத்தந்தி
|
15 Oct 2023 10:25 AM GMT

உடலில் புகுந்த கெட்ட ஆவியை வெளியேற்றுகிறேன் என கூறி உத்தர பிரதேசத்தில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த நபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

பதோஹி,

உத்தர பிரதேசத்தின் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்களுடைய 18 வயது மகளை மோதிலால் (வயது 52) என்பவரிடம் அழைத்து சென்றுள்ளனர். அவர் தன்னை மந்திர, தந்திரங்கள் அறிந்த நபர் என கூறி கொண்டு, உங்களுடைய மகளுக்கு பேய் பிடித்து விட்டது என கூறி இருக்கிறார்.

இதனால் அவர்கள் பயந்து போயுள்ளனர். அந்த இளம்பெண்ணின் உடலில் பிடித்த பேயை நான் ஓட்டி விடுவேன் என கூறி, அதற்கான பூஜை செய்வதற்கு ரூ.4 ஆயிரம் வேண்டும் என கூறியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மாலை இளம்பெண்ணின் தந்தை, அவருடைய மகளை அழைத்து கொண்டு மோதிலாலிடம் சென்று விட்டார்.

அந்த நபர், பைக்கில் இளம்பெண்ணை அழைத்து கொண்டு, பதோஹி நகரில் தர்வாசி கிராமத்தில் உள்ள ஒரு கோவிலின் பின்னால் உள்ள அறைக்கு சென்றிருக்கிறார். இதன்பின்பு இளம்பெண்ணை மோதிலால் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

3 மணிநேரத்திற்கு பின்பு வெளியே வந்த அவர், அடுத்த நாள் சிகிச்சைக்காக மீண்டும் வரவேண்டும் என அந்த பெண்ணிடம் கூறியுள்ளதுடன், இந்த சம்பவம் பற்றி யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியும் இருக்கிறார்.

இதுபற்றி பெற்றோரிடம் அந்த இளம்பெண் கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அவருடைய தந்தை போலீசில் புகார் அளித்து உள்ளார். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது.

இதுபற்றி போலீஸ் சூப்பிரெண்டு மீனாட்சி கத்யாயன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், மருத்துவ பரிசோதனையில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. கோர்ட்டில் எழுத்துப்பூர்வ வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில், மோதிலாலை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்