< Back
தேசிய செய்திகள்
ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்:  தீக்குளித்த பி.யூ. கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு
தேசிய செய்திகள்

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டல்: தீக்குளித்த பி.யூ. கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சாவு

தினத்தந்தி
|
4 Sep 2023 6:45 PM GMT

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டியதால் தீக்குளித்த பி.யூ. கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தாவணகெரே-

தாவணகெரே மாவட்டம் ஜகலூர் டவுன் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பி.யூ. கல்லூரியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தன்னுடன் படிக்கும் ஆண் நண்பர்கள் 2 பேருடன் அப்பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்றார்.

அப்போது, அந்த மாணவர்கள் 2 பேரும் மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர். இதனை குடித்த மாணவி மயக்கம் அடைந்தார். பின்னர் மாணவியை அவர்கள் 2 பேரும் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது செல்போனில் மாணவியை நிர்வாணமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அதனை வைத்து மாணவியிடம் பணம் கேட்டு 2 பேரும் மிரட்டி வந்தனர். பணம் தரவில்லை என்றால் வீடியோவை சமூகவலைதளங்களில் வெளியிடுவோம் எனவும் கூறி மிரட்டி வந்துள்ளனர். இந்தநிலையில் மாணவி கடந்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாள்.

அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுப்பி மாவட்டம் மணிப்பாலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஜகலூர் போலீசார் 2 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்