< Back
தேசிய செய்திகள்
மோடி பிரதமரான பிறகு மொத்த உலகமும் பாரதத்தின் புகழை பாடுகிறது - மத்திய மந்திரி அமித்ஷா
தேசிய செய்திகள்

"மோடி பிரதமரான பிறகு மொத்த உலகமும் பாரதத்தின் புகழை பாடுகிறது" - மத்திய மந்திரி அமித்ஷா

தினத்தந்தி
|
30 Dec 2023 4:56 PM GMT

மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காந்திநகர்,

சுதந்திரத்துக்குப் பிறகு நரேந்திர மோடி பிரதமராகும் வரை, நாட்டின் பார்வை 'இந்தியாவை மையமாக' கொண்டிருக்கவில்லை என்று நாட்டை நேசிப்பவர்கள் உணர்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சுவாமிநாராயண் குருகுல விஸ்வவித்யா பிரதிஷ்டாணம் நடத்திய பூஜ்ய புராணி சுவாமி ஸ்மிரிதி மகோத்ஸ்வத்தில் மத்திய மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின்போது அவர் பேசியதாவது;-

"நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நாட்டை நேசித்தவர்களுக்கும், பாரதம் என்ற வார்த்தை மீது மரியாதை கொண்டவர்களுக்கும் ஒரு பெரிய வருத்தம் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்தாலும் அதன் பார்வை பாரதத்தை மையப்படுத்தியதாக இல்லாமல், வேறு எதையோ மையப்படுத்தியதாக இருக்கிறதே என்று அவர்கள் வருந்தினர்.

இந்த பார்வையை மாற்ற 1950 முதல் பா.ஜ.க.வினர் பாடுபட்டார்கள். இந்த நோக்கத்திற்காக பலர் தங்கள் உயிரையும் இழந்திருக்கிறார்கள். குஜராத்தின் முதல்-அமைச்சராக இருந்த நரேந்திர மோடி, இந்தியவின் பிரதமரான பிறகுதான் அனைத்தும் மாறியது. அதன் பிறகு ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் புகழை பாடத்தொடங்கியது. நாடு தற்போது பலதுறைகளில் முன்னேறி வருகிறது.

மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது. புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்கப்படுவதில் நாம் 3-வது இடத்தில் இருக்கிறோம். இதேபோல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியிலும் நாம் 3-வது இடத்தில் உள்ளோம்."

இவ்வாறு அமித்ஷா தெரிவித்தார்.

மேலும் செய்திகள்