< Back
தேசிய செய்திகள்
டெல்லியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் வங்காளதேச பிரதமர்  சந்திப்பு
தேசிய செய்திகள்

டெல்லியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதியுடன் வங்காளதேச பிரதமர் சந்திப்பு

தினத்தந்தி
|
6 Sep 2022 4:09 PM GMT

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்காரை டெல்லியில் சந்தித்து பேசியுள்ளார்.

புதுடெல்லி,

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இந்தியாவுக்கு நேற்று வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஹசீனாவுக்கு இன்று ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய முறையிலான சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹசீனா, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின்பு, பிரதமர் மோடியுடனான சந்திப்பு இன்று நடந்தது. இதில், இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை தலைவர்கள் மறுஆய்வு செய்ததுடன், அவற்றை மேலும் வலுப்படுத்துவதற்கான இருதரப்பு பேச்சுவார்த்தையிலும் இன்று ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகளுக்கு இடையே 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

இதன்படி, குஷியாரா ஆற்றின் நீரை திரும்ப பெறுதல், விண்வெளி தொழில்நுட்ப துறையில் ஒத்துழைப்புடன் செயல்படுதல், ரெயில்வே துறை பயன்படுத்த கூடிய சரக்கு இயக்கம் போன்ற பிரிவுகளில் தகவல் தொழில்நுட்ப திட்டங்களை ஒருங்கிணைப்பது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, வங்காளதேச ரெயில்வே அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தல், நீதிமன்ற அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்தல் மற்றும் பிரசார் பாரதி மற்றும் வங்காளதேச தொலைக்காட்சி ஆகியவற்றுக்கு இடையேயான ஒளிபரப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுதல் ஆகிய 7 பிரிவுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டு உள்ளன.

டெல்லியில் ராஷ்டிரபதி பவனுக்கு சென்ற ஷேக் ஹசீனா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார். இதுபற்றி ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷேக் ஹசீனாவை வரவேற்கும்போது, நம்முடைய பகிரப்பட்ட வரலாறு, மொழி மற்றும் கலாசாரம் ஆகியவை நம்மை ஒருவருடன் ஒருவர் இணைக்கிறது என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார் என தெரிவித்து உள்ளது.

இந்த சந்திப்பில், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் ஹசீனா தலைமையின் கீழ், இரு தரப்பு உறவுகள் அதிகம் வளர்ச்சி அடைந்தன என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனை தொடர்ந்து, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்காரை ஹசீனா சந்தித்து பேசினார். இதுபற்றி தன்கார் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், இரு நாட்டு மக்களின் நலன்களுக்காக, நல்லுறவை முன்னெடுத்து செல்லும் வகையிலான இரு நாட்டின் பகிரப்பட்ட ஈடுபாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினோம் என தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்