< Back
தேசிய செய்திகள்
முந்தின அரசு வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றவில்லை; வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு
தேசிய செய்திகள்

முந்தின அரசு வாக்குறுதியை ஒருபோதும் நிறைவேற்றவில்லை; வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேச்சு

தினத்தந்தி
|
25 May 2023 7:57 AM GMT

முந்தின அரசுகள் வாரிசுகளை பற்றி மட்டுமே கவனம் செலுத்தி வந்தன என வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

உத்தரகாண்டில் முதன்முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்க இந்திய ரெயில்வே முடிவு செய்தது. கவச தொழில் நுட்பம் உள்பட நவீன பாதுகாப்பு அம்சங்களை இந்த ரெயில் கொண்டு உள்ளது.

உத்தரகாண்டுக்கு வருகை தருபவர்களில் குறிப்பிடும்படியாக சுற்றுலாவாசிகளுக்கு, ஒரு புதிய சகாப்தத்திற்கான, வசதியான பயண அனுபவம் ஏற்படும் வகையில், உலக தரத்திலான வசதிகளை இந்த ரெயில் கொண்டு உள்ளது.

இந்த ரெயில், உத்தரகாண்டின் டேராடூன் மற்றும் டெல்லி இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி இந்த புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி வழியே கொடியசைத்து தொடங்கி வைத்து உள்ளார்.

இது டெல்லிக்கு இயக்கப்படும் 5-வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகும். 314 கி.மீ. தொலைவை 4 மணி நேரம் 45 நிமிடங்களில் ரெயில் கடந்து செல்லும் என்றும், புதன்கிழமை தவிர வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டேராடூன் மற்றும் டெல்லி இடையே ஹரித்வார், ரூர்க்கி, சஹாரன்பூர், முசாபர்நகர் மற்றும் மீரட் ஆகிய 5 ரெயில் நிலையங்களில் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்லும்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, முந்தின அரசுகள் தங்களது வாரிசுகளை பற்றி மட்டுமே கவனம் செலுத்தின. அவர்களது முன்னுரிமை விசயங்களில் பொதுஜனம் இல்லை.

இதற்கு முன்பிருந்த அரசாங்கம், வாக்குறுதிகளை மட்டுமே வழங்கின. அவற்றை ஒருபோதும் நிறைவேற்றவில்லை. ஆனால், நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி இருக்கிறோம். ரெயில்வே பிரிவும் அவர்களால் (முந்தின அரசு) புறக்கணிக்கப்பட்டது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்