< Back
தேசிய செய்திகள்
உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயி கொலை
தேசிய செய்திகள்

உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயி கொலை

தினத்தந்தி
|
3 Dec 2022 6:45 PM GMT

நவலகுந்துவில் உருட்டுக்கட்டையால் தாக்கி விவசாயியை கொலை செய்த 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

உப்பள்ளி:

கால்பட்டதால் தகராறு

தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா அமரகோல் கிராமத்தை சேர்ந்தவர் மைலாரி கவுடா. இவரது மகன் சங்கனகவுடா (வயது 43). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை அந்தப்பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர், சாலையோரம் நிறுத்தி கீழே இறங்கினார். அப்போது சங்கனகவுடா மீது அவரது கால் பட்டதாக தெரிகிறது.

இதனால் சங்கனகவுடா அவரை கண்டித்துள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

விவசாயி கொலை

இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்த அவர், சங்கனகவுடாவுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர்கள் அங்கிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து சங்கனகவுடாவை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கனகவுடா, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இதனை பார்த்த அந்தப்பகுதி மக்கள் சங்கனகவுடாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

5 பேருக்கு வலைவீச்சு

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நவலகுந்து போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கும், அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று பார்வையிட்டனர். பின்னர் கொலையான சங்கனகவுடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கும்போது கால்பட்டதால் ஏற்பட்ட தகராறில் சங்கனகவுடா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து நவலகுந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய 5 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்