< Back
தேசிய செய்திகள்
தெலுங்கானா:வாழ்த்து தெரிவித்த டிஜிபிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்..!
தேசிய செய்திகள்

தெலுங்கானா:வாழ்த்து தெரிவித்த டிஜிபிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்..!

தினத்தந்தி
|
3 Dec 2023 2:26 PM GMT

​​தெலுங்கானா காங். தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஷ்கார், மத்திய பிரததேசம், ராஜஸ்தான், தெலுங்கானா என 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

பெரும்பாலும் வெற்றி வாய்ப்புகள், அடுத்த ஆட்சி யாருடையது என்ற விவரங்கள் தெரியவந்து விட்டன.

காங்கிரஸ் கட்சி, தான் ஆட்சி புரிந்த சத்தீஷ்கார் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சியை பாஜகவிடம் இழந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. இதனால் வடக்கே 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் தோல்வி முகமாக மாறியுள்ளது. ஆனால், தெற்கே தெலுங்கானாவில் முதன் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தெலுங்கானாவில் 119 சட்டப்பேரவை தொகுதியின் முன்ணனி நிலவரப்படி 64 தொகுதிகளில் முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் இருக்கிறது. ஆளும் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. 8 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

இதனால் ஏறக்குறைய தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க போவது உறுதியானதை அடுத்து தெலுங்கானா டிஜிபி அஞ்சனிக்குமார் , காங்கிரஸ் தலைவரும் தெலுங்கானாவின் அடுத்த முதல்-மந்திரியாக கருதப்படும் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிமுறைகளானது இன்னும் நடைமுறையில் உள்ள நிலையில், ஓர் அரசியல் தலைவரை டிஜிபி எனும் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி சந்தித்து வாழ்த்து கூறியது தேர்தல் விதிமுறை மீறல் என கூறி தெலுங்கானா டிஜிபி அஞ்சன்குமாரை தலைமை தேர்தல் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போது, தெலுங்கானா காங். தலைவர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிபியுடன் ரேவந்த் ரெட்டியை சந்திக்க சென்ற மேலும் 2 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

மேலும் செய்திகள்