< Back
தேசிய செய்திகள்
பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது
தேசிய செய்திகள்

பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது

தினத்தந்தி
|
14 Jun 2023 9:58 PM GMT

பல்லாரியில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு:

ஆந்திர மாநிலம் நந்தியால் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 33). இவர் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பை சேர்ந்தவர் ஆவார். இவர் வாலிபர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்துள்ளாா். மேலும் அவர்களுக்கு ரகசிய ஆயுத பயிற்சியும் அளித்து வந்துள்ளார். தெலுங்கானாவில் பி.எப்.ஐ. அமைப்பினர் மற்றும் வாலிபர்களை பயங்கரவாத அமைப்பில் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளார். இதுபற்றி அறிந்ததும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனை அறிந்ததும் முகமது யூனுஸ் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் பயங்கரவாதி முகமது யூனுஸ், கர்நாடக மாநிலம் பல்லாரி டவுன் கவுல் பஜார் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்லாரிக்கு விரைந்து வந்து முகமது யூனுசை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் தனது அடையாளத்தை மறைத்து கடந்த 4 மாதங்களாக பல்லாரியில் பஷீர் என்ற பெயரில் பிளம்பராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்