< Back
தேசிய செய்திகள்
இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா விமானம் ரத்து
தேசிய செய்திகள்

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி: ஏர் இந்தியா விமானம் ரத்து

தினத்தந்தி
|
8 Oct 2023 12:22 AM GMT

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கான ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் 300 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். 779 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக டெல் அவிவ் நகருக்கான ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. டெல்லியில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வாரந்தோறும் 5 விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் நேற்று திடீரென ஏவுகணைகளை கொண்டு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். இதனால், நாட்டின் பல பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு, பெரும் பதற்றம் நீடித்து வருகிறது.

எனவே டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு நேற்று இயக்க வேண்டிய AI139 என்ற எண் கொண்ட விமானம் ரத்து செய்யப்பட்டது. இதேபோல டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லி வர வேண்டிய AI140 விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டது. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்