< Back
தேசிய செய்திகள்
பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி காலமானார் - பிரதமர் மோடி இரங்கல்

தினத்தந்தி
|
13 May 2024 7:13 PM GMT

பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி நேற்று காலமானார்.

பாட்னா,

பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நேற்று மாலை காலமானார். 72 வயதான அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

1952ம் ஆண்டு பிறந்த சுஷில் குமார் மோடி, மூன்று தசாப்தங்களாக அரசியல் களத்தில் இருந்தவர். கடந்த 2005 முதல் 2013 வரை மற்றும் 2017 முதல் 2020 வரை பீகார் துணை முதல்-மந்திரியாகவும், நிதி மந்திரியாகவும் பதவி வகித்தார். இதுதவிர எம்.எல்.ஏ., எம்.எல்.சி., மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

இந்த சூழலில், கடந்த ஏப்ரல் மாதம் சுஷில் குமார் மோடிக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக, தான் 2024 மக்களவை தேர்தலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுஷில் குமார் மோடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று பாட்னாவின் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுஷில் குமார் மோடி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில், "கட்சியில் எனது மதிப்புமிக்க சக தொண்டரும், பல தசாப்தங்களாக எனது நண்பராக இருந்தவருமான சுஷில் மோடியின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் பா.ஜனதாவின் எழுச்சி மற்றும் வெற்றியில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எமர்ஜென்சியை கடுமையாக எதிர்த்து, மாணவர் அரசியலில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கினார். அவர் கடின உழைப்பாளியாகவும், அன்புக்குரிய எம்.எல்.ஏ.வாகவும் இருந்தார். அரசியல் தொடர்பான விஷயங்களை ஆழமாகப் புரிந்துகொண்டவர்.

ஒரு நிர்வாகியாகப் பாராட்டத்தக்க பல பணிகளைச் செய்தார். ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பங்கு எப்போதும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதளத்தில், "நமது மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியின் மறைவுச் செய்தியால் நான் வருந்துகிறேன். இன்று பீகார் அரசியல் ஒரு சிறந்த தலைவரை இழந்துவிட்டது. ஏ.பி.வி.பி. முதல் பா.ஜனதா வரை, சுஷில் அமைப்பு மற்றும் அரசாங்கத்தில் பல முக்கிய பதவிகளை வகித்தார். அவரது அரசியல் வாழ்க்கை ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அவரது மறைவால் பீகார் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நீண்ட நாட்களுக்கு நிரப்ப முடியாது. இந்த துயர நேரத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருடன் ஒட்டுமொத்த பா.ஜனதாவும் நிற்கிறது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்