< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை - மாநில அரசு அனுமதி
தேசிய செய்திகள்

மணிப்பூரில் ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' - மாநில அரசு அனுமதி

தினத்தந்தி
|
10 Jan 2024 1:23 PM GMT

பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இம்பால்,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, 'பாரத் ஜோடோ யாத்திரை' (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரை வெற்றியடைந்த நிலையில், அடுத்து நாட்டின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரையிலான யாத்திரையை நடத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.

மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இந்த பாத யாத்திரையை வருகிற 14-ம் தேதி ராகுல் காந்தி தொடங்க உள்ளார். இந்த யாத்திரைக்கு 'பாரத் ஜோடோ நியாய யாத்திரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,713 கி.மீ. தூரம் கொண்ட இந்த யாத்திரை பேருந்துகளிலும், நடைபயணத்திலும் மேற்கொள்ளப்படும் என்றும் 110 மாவட்டங்களையும், சுமார் 100 மக்களவைத் தொகுதிகளையும், 337 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மணிப்பூரில் ராகுல் காந்தியின் யாத்திரையை தொடங்குவதற்கு மாநில அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக கடந்த 8 நாட்களுக்கு முன் மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்கை மாநில காங்கிரஸ் கமிட்டியினர் நேரில் சந்தித்து ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி கோரினர். ஆனால், பைரன் சிங் அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக மாநில காங்கிரஸ் தலைவர் கேஷ்யாம் மேகசந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மணிப்பூர் மாநில அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி குறிப்பிட்ட பங்கேற்பாளர்களுன் மட்டுமே யாத்திரையை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் மணிப்பூர் மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்