< Back
தேசிய செய்திகள்
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்கும்; மடாதிபதிகள் மத்தியில்முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
தேசிய செய்திகள்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்கும்; மடாதிபதிகள் மத்தியில்முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

தினத்தந்தி
|
6 Jun 2023 8:02 PM GMT

கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்கும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கையை அரசு ஏற்கும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

அரசியல் சாசனம்

முதல்-மந்திரி சித்தராமையாவை பிற்படுத்தப்பட்ட-தலித் சமூகங்களின் மடாதிபதிகள், மடாதிபதி நிரஞ்சானந்தபுரி சுவாமி தலைமையில் நேற்று பெங்களூருவில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது முதல்-மந்திரிக்கு மடாதிபதிகள் வாழ்த்து கூறினர். அவர்கள் மத்தியில் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா அரசு தேர்தல் நேரத்தில் அவசரகதியில் இட ஒதுக்கீட்டை உயர்த்தியது. அதற்கான சட்டத்தை கொண்டு வந்தாலும், இதை அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசுக்கு வரைவு அறிக்கையை அப்போது அரசு தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன்பு தான் அனுப்பியது.

எதிரான நிலைப்பாடு

இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் முந்தைய அரசு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து சமூகங்களின் நம்பிக்கையை பெற்று உள் ஒதுக்கீடு வழங்குமாறு நான் ஆலோசனை கூறினேன். ஆனால் இதை அரசு ஏற்கவில்லை. அதனால் பல சமூகங்கள் போராட்டங்களை நடத்தின. அர்ப்பணிப்பு உணர்வு இல்லாவிட்டால் இத்தகைய குழப்பங்கள் நடைபெறுவது சகஜம்.

பா.ஜனதா எப்போதும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட கட்சி. அரசியல் நோக்கத்திற்காக அக்கட்சியின் ஆட்சியில் இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது. இந்த விஷயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் எப்போதும் சமூக நீதியில் சமரசம் செய்து கொள்ளாது. சமுதாயத்தில் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டியுள்ளது.

சாதிவாரி மக்கள்தொகை

இந்த நோக்கத்தில் நான் முன்பு முதல்-மந்திரியாக இருந்தபோது ரூ.162 கோடியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அந்த அறிக்கையை முன்பு இருந்த அரசுகள் ஏற்கவில்லை. ஆனால் எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்த அறிக்கையை ஏற்கும். காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.59 ஆயிரம் கோடி செலவு செய்கிறது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்