< Back
தேசிய செய்திகள்
புத்தூர் அருகே கடையில்  நகை வாங்குவது போல் நடித்து ரூ.2 லட்சம் தங்க சங்கிலி திருட்டு
தேசிய செய்திகள்

புத்தூர் அருகே கடையில் நகை வாங்குவது போல் நடித்து ரூ.2 லட்சம் தங்க சங்கிலி திருட்டு

தினத்தந்தி
|
9 Aug 2023 6:45 PM GMT

புத்தூர் அருகே ஹிஜாப் அணிந்து வந்த பெண் ஒருவர் நகை வாங்குவதுபோல் நடித்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை திருடி சென்ற கண்காணிப்பு கேமரா காட்சி வைரலாகியுள்ளது.

மங்களூரு-

புத்தூர் அருகே ஹிஜாப் அணிந்து வந்த பெண் ஒருவர் நகை வாங்குவதுபோல் நடித்து ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை திருடி சென்ற கண்காணிப்பு கேமரா காட்சி வைரலாகியுள்ளது.

ஹிஜாப் அணிந்து வந்த பெண்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகாவில் நகைக்கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த நகைக்கடைக்கு பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்திருந்தார். அந்த பெண் கையில் குழந்தை ஒன்று இருந்தது. கடைக்கு வந்த அவர், அங்கிருந்த ஊழியர்களிடம் நகைகளை எடுத்து வைக்கும்படி கூறினார். குறிப்பாக கை செயினை எடுத்து வைக்கும்படி கூறினார்.

அதன்படி ஊழியர்கள் 8 கிராம், 4 கிராம் எடை கொண்ட தங்க கை செயினை எடுத்து வைத்தனர்.

அப்போது கடையின் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பிய அந்த பெண், பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை எடுத்து தனது ஆடைக்குள் ஒழித்து வைத்து கொண்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதை பார்த்த கடையின் ஊழியர்கள், நகைகளை சரி பார்த்தனர். அப்போது தங்க கை செயின் மாயமாகியிருந்தது.

ரூ.2 லட்சம் நகைகள் திருட்டு

இதனால் ஹிஜாப் அணிந்து வந்த பெண்தான் நகைகளை திருடி சென்றிருக்கலாம் என்று சந்தேகித்த கடையின் ஊழியர்கள், கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கடைக்கு வந்த பெண் தங்க நகைகளை தனது ஆடைக்குள் மறைத்து, திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் புத்தூர் போலீசிற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகளை பெண் திருடி சென்றதாக தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையில் ஹிஜாப் அணிந்து வந்த பெண் தங்க சங்கிலியை தனது ஆடைக்குள் மறைத்து வைத்து திருடி சென்ற கண்காணிப்பு கேமரா காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மேலும் செய்திகள்