< Back
தேசிய செய்திகள்
செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
தேசிய செய்திகள்

செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

தினத்தந்தி
|
21 July 2023 8:03 AM GMT

அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 26ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. .

புதுடெல்லி,

சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இதனால் 3-வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. விசாரணைக்கு பின்பு 3-வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கூறிய தீர்ப்பில், செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது; ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல, அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி, அவரது மனைவி மேகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எஸ்.போபன்னா, சுந்தரேஷ் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான வழக்கில் அமலாக்கத்துறை எழுத்துப்பூர்வ பதில் தாக்கல் செய்யவேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அத்துடன், வழக்கின் விசாரணையை வரும் 26ம் தேதி மதியம் 2 மணிக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை வரை நடவடிக்கை எதுவும் எடுக்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்