< Back
தேசிய செய்திகள்
திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 17 பேர் மட்டுமே முதலிடம்
தேசிய செய்திகள்

திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியல் வெளியீடு: 17 பேர் மட்டுமே முதலிடம்

தினத்தந்தி
|
26 July 2024 2:55 PM GMT

திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

இளநிலை மருத்துவ படிப்பு, பல் மருத்துவ படிப்பு மற்றும் ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக 'நீட்' தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நீட் தேர்வு நடத்த தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே கடந்த மே மாதம் 5-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. 14 வெளிநாட்டு தேர்வு மையங்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. 23 லட்சத்து 33 ஆயிரம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு முடிவுகள், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. அதில், இதுவரை இல்லாத வகையில் 67 பேர் முழு மதிப்பெண்ணான 720 மதிப்பெண் பெற்றனர். 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளிக்கப்பட்டு இருந்தது. இதுதவிர, வினாத்தாள் கசிவு, வினாத்தாள் விற்பனை, ஆள் மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக்கோரியும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், மறுதேர்வுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்தனர். மேலும், 'நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையங்கள் வாரியாகவும், நகரங்கள் வாரியாகவும் தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடும்போது, மாணவர்களின் பெயரை மறைத்து 'டம்மி' வரிசை எண்ணை பயன்படுத்தி வெளியிட வேண்டும்' என உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) கடந்த 20-ம் தேதி மீண்டும் வெளியிட்டது. 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 571 நகரங்களில் 4 ஆயிரத்து 750 தேர்வு மையங்களில் தேர்வை எழுதிய தேர்வர்கள் அனைவருடைய மதிப்பெண்களையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

இந்த நிலையில், கருணை மதிப்பெண் ரத்து செய்யப்பட்டு திருத்தப்பட்ட நீட் தேர்வு தரவரிசை பட்டியலை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் தற்போது 13,15,853 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை. இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியானதை அடுத்து திருத்தப்பட்ட நீட் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வில் முன்பு 67 பேர் முதலிடம் பெற்ற நிலையில் தற்போது 17 பேர் மட்டுமே முதலிடம் பிடித்துள்ளனர். தமிழகத்தில் 1.52 லட்சம் பேர் நீட் எழுதிய நிலையில் 89,198 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.. இதில் முதலிடம் பிடித்த 17 பேரில் தமிழகத்தை சேர்ந்த பட்டியலின மாணவர் பி.ராஜனேஷும் ஒருவர் ஆவார் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்