தேசிய செய்திகள்
மணிப்பூரில் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
தேசிய செய்திகள்

மணிப்பூரில் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

தினத்தந்தி
|
29 Jun 2023 12:27 PM GMT

மணிப்பூரில் ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இம்பால்,

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும்.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று மணிப்பூர் சென்றார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். ராகுல்காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் காவல்துறை தடுத்து நிறுத்தியதை அடுத்து இம்பால் திரும்பினார் ராகுல்காந்தி.

மணிப்பூரில் ராகுல்காந்தியை தடுத்து நிறுத்தியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ,

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய மணிப்பூர் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறேன். முக்கியமான பிரச்சினையில் பிரதமர் வாய்மூடி மௌனமாக இருக்கும் நிலையில், மணிப்பூர் மக்களுக்கு காது கொடுக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறார்.

அங்கு அமைதியை மீட்டெடுப்பதே இப்போது முதன்மையானதாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான எதேச்சதிகாரர்களின் இத்தகைய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகள் அபத்தமானது மற்றும் கண்டிக்கத்தக்கது." இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்