< Back
தேசிய செய்திகள்
சீனா முன் இந்தியா சரணடைய ராகுல் காந்தி விரும்புகிறார்: பா.ஜ.க. அதிரடி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

சீனா முன் இந்தியா சரணடைய ராகுல் காந்தி விரும்புகிறார்: பா.ஜ.க. அதிரடி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
3 Jan 2023 4:30 PM GMT

சீனா முன் இந்தியா சரணடைய வேண்டுமென ராகுல் காந்தி விரும்புகிறார் என்று பா.ஜ.க. அதிரடி குற்றச்சாட்டு கூறியுள்ளது.



புதுடெல்லி,


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுள்ளார். அவர் இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக நடிகர் கமல்ஹாசனுடன் சந்தித்து பேசினார்.

இதுபற்றி பா.ஜ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சுதான்சு திரிவேதி செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, ராகுல் காந்தி குழப்பம் அடைந்தவராக மட்டுமின்றி, இந்திய ஒற்றுமை யாத்திரையால் குழப்பத்திற்கு அவர் இரையாகி விட்டார் என உணர்கிறேன்.

அவருக்கு உண்மையான அறிவு தேவை என நினைக்கிறேன். ஆனால், காங்கிரசின் நோக்கம் வெளிவந்து இருப்பது மிக நன்று. காங்கிரஸ் அரசாட்சியின்போது, நடந்தது போன்று சீனாவின் முன் இந்தியா சரணடைய வேண்டுமென அவரது நோக்கங்களை ராகுல் காந்தி தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

சீனாவுடன் எல்லையில் பதற்றம் நிறைந்த சூழல் காணப்படும்போது, அவர் நேர்காணலில் என்ன கூறுகிறார்? சீனா முன் இந்தியா சரணடைய வேண்டுமென்று கூறுகிறார்.

ரஷியா மற்றும் உக்ரைன் போரை பற்றி அவர் என்ன குறிப்பிடுகிறார்? மேற்கத்திய நாடுகளுடன் இருக்க உக்ரைன் விரும்புகிறது. அதனால், அதன் புவியியல் அமைப்பை மாற்ற ரஷியா விரும்புகிறது என அவர் கூறுகிறார்.

அவர் தொடர்ந்து, இந்தியா மற்றும் சீனா இடையேயும் இதே சூழல் உள்ளது. மேற்கத்திய நாடுகளுடன் இணைய இந்தியா விரும்புகிறது. நமது புவியியல் அமைப்பும் மாறும் என கூறுகிறார். ராகுல் காந்தி என்ன கூற விரும்புகிறார்? என்று திரிவேதி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்