< Back
தேசிய செய்திகள்
வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!
தேசிய செய்திகள்

வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.!

தினத்தந்தி
|
23 Sep 2023 9:11 AM GMT

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி இன்று சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

வாரணாசி,

பிரதமர் மோடி, தான் போட்டியிட்டு ஜெயித்த வாரணாசி தொகுதியில், விளையாட்டு பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதற்காக உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.121 கோடி மதிப்புள்ள நிலத்தை வாரணாசியில் கையகப்படுத்தி கொடுத்து உள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.330 கோடியில் சர்வதேச தரத்துடன் பிரமாண்ட ஸ்டேடியத்தை நிறுவ உள்ளது.

வாரணாசியின் ராஜதலா பகுதியில் உள்ள கஞ்சாரி கிராமத்தில் இந்த மைதானம் அமைகிறது. 30 மாதங்களில் இதை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதில் 30 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டிகளை ரசிக்க முடியும்.

கடவுள் சிவனை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டு மைதானம் உருவாக்கப்பட உள்ளது என்றும், திரிசூலம் வடிவிலான விளக்கு கோபுரங்கள், உடுக்கை வடிவிலான மையப்பகுதிகளும், பிறை நிலா வடிவிலான மேற்கூரைகளும் அமைய உள்ளதாக மாதிரி படங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்