< Back
தேசிய செய்திகள்
ஜூலை 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் - இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு
தேசிய செய்திகள்

ஜூலை 18-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் - இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு

தினத்தந்தி
|
10 Jun 2022 12:51 AM GMT

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் ஜூலை 18-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் 'முதல் குடிமகன்' என அழைக்கப்படும் ஜனாதிபதி 5 ஆண்டு களுக்கு ஒருமுறை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களால் ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

இதன்படி தற்போது ஜனாதிபதியாக இருக்கும் ராம்நாத் கோவிந்த், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி தேர்வு செய்யப்பட்டு, இந்தியாவின் 14-வது ஜனாதி பதியாக பதவியேற்றுக்கொண்டார்.

இவரது பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி, பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுத்தாக வேண்டும்.

எனவே ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தேர்தல் தேதியை அறிவித்தார்.

இதன்படி, ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 18-ந்தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 15-ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகிற 29-ந்தேதி கடைசி நாள் ஆகும்.

30-ந்தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கு ஜூலை 2-ந்தேதி கடைசி நாள். ஜூலை 18-ந்தேதி தேர்தல் நடைபெறும். ஜூலை 21-ந்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் 776 எம்.பி.க் கள், 4 ஆயிரத்து 33 எம்.எல். ஏ.க்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 809 பேர் வாக்களிக்க இருப்பதாகவும், இவர்களின் ஓட்டு மதிப்பின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 என்றும், தலைமை தேர்தல் கமிஷனர் தெரிவித்தார்.

இதில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுமதிப்பின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 231 ஆகும். எம்.பி.க்கள் ஓட்டுமதிப்பின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 200 ஆகும்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உள்பட அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற கூட்ட அரங்கங்களிலும் நடைபெறும். இவ்வாறு நாடு முழுவதும் மொத்தம் 31 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் சட்டசபையின் தரைத்தளத்தில் உள்ள கமிட்டி அறையில் தேர்தல் நடைபெறும். தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக நாடாளுமன்றத்துக்கு மாநிலங்களவை செயலக அதிகாரிகள் 2 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதைப்போல மாநிலங்களில் சட்டசபை செயலாளர் மற்றும் உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்துக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன், இணைச்செயலாளர் ஆர்.சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மாநிலங்களவையில் காலியாகும் 57 உறுப்பினர் பணியிடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனாதிபதி தேர்தல் அதற்கு ஒருநாள் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத்கோவிந்தும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் மீராகுமாரும் களம் இறங்கினர். இதில் ராம்நாத் கோவிந்த் வெற்றி வாகை சூடினார்.

எனவே தற்போதைய தேர்தலிலும் இரு கட்சிகளும் தங்கள் கட்சி சார்பில் வேட்பாளர்களை களம் இறக்க தயாராகி வருகிறார்கள். இதில் ஆளும் பா.ஜ.க. வேட்பாளராக யாரை நிறுத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பான்மையாக உள்ள பா.ஜ.க. மாநிலங்களவையிலும் கணிசமான இடங்களை கொண்டுள்ளது. மேலும் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவோடு ஜனாதிபதி பதவியை தக்க வைத்துக்கொள்ள அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.

எதிர்க்கட்சியான காங்கிரசும் தனது வேட்பாளரை தேர்வு செய்யும் பணியை முடுக்கி விட்டுள்ளது. எனவே இன்னும் சில தினங்களில் ஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விடும்.

மேலும் செய்திகள்