தேசிய செய்திகள்
9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
தேசிய செய்திகள்

9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி

தினத்தந்தி
|
18 Jun 2024 1:12 PM GMT

வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.

லக்னோ,

மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, கடந்த 9-ந்தேதி இந்தியாவின் பிரதமராக 3-வது முறை நரேந்திர மோடி பதவியேற்றார். பதவியேற்ற மறுநாள் பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற மோடி, விவசாயிகளுக்கு நிதியுதவி அளிப்பதற்கான முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ.6 ஆயிரம் வழங்கும் 'பி.எம்.கிசான்' என்ற பிரதமரின் விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தை மோடி அறிவித்தார். இதன்படி 17-வது தவணையாக 9 கோடியே 26 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக தனது தொகுதிக்கு பிரதமர் மோடி இன்று வருகை தந்துள்ளார். அவரை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்திபென் பட்டேல், மத்திய விவசாயத்துறை மந்திரி சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் 9.26 கோடி விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதியை பிரதமர் மோடி விடுவித்தார்.

மேலும் செய்திகள்