< Back
தேசிய செய்திகள்
பாதுகாப்பு கோரி மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகிறார்கள்: கனிமொழி எம்.பி. பேட்டி
தேசிய செய்திகள்

பாதுகாப்பு கோரி மணிப்பூர் மக்கள் இன்றும் போராடி வருகிறார்கள்: கனிமொழி எம்.பி. பேட்டி

தினத்தந்தி
|
30 July 2023 10:10 AM GMT

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை என்று மணிப்பூர் சென்று திரும்பிய பிறகு கனிமொழி எம்.பி. கூறினார்.

புதுடெல்லி,

மணிப்பூரில் மெய்தி, குக்கி இனக்குழுக்களுக்கு இடையே கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. கடந்த மே 3-ம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வன்முறையை கட்டுப்படுத்த துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் தற்போதைய கள நிலவரம் குறித்து ஆராய 2 நாள் பயணமாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேற்று மணிப்பூர் சென்றது. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை, எம்.பி.க்கள் குழு சந்தித்தது. இந்த குழுவினர் இன்று டெல்லி திரும்பினர். டெல்லி திரும்பிய பிறகு கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை, பெண் எம்.பி.க்கள் மட்டும் சந்தித்து பேசினோம். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களை என்ன கூறி தேற்றுவது என்றே தெரியவில்லை. தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என மணிப்பூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காப்பாற்ற வேண்டிய காவல்துறையே உதவவில்லை என பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீருடன் கூறினர்" இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார்.

மேலும் செய்திகள்