< Back
தேசிய செய்திகள்
இந்தூர் நகரின் தூய்மைக்கு மக்களே காரணம், அதிகாரிகள் அல்ல - பா.ஜனதா நிர்வாகி பரபரப்பு கருத்து
தேசிய செய்திகள்

இந்தூர் நகரின் தூய்மைக்கு மக்களே காரணம், அதிகாரிகள் அல்ல - பா.ஜனதா நிர்வாகி பரபரப்பு கருத்து

தினத்தந்தி
|
7 Oct 2022 8:01 PM GMT

மத்திய அரசின் விருது பெற்ற இந்தூர் நகரின் தூய்மைக்கு மக்களும், தூய்மை பணியாளர்களுமே காரணம் என கைலாஷ் விஜயவர்கியா கூறியுள்ளார்.

இந்தூர்,

மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சி்ங் சவுகான் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது. அங்குள்ள இந்தூர் நகரம், நாட்டிலேயே மிகவும் தூய்மையான நகரம் என மத்திய அரசின் 'ஸ்வாச் சுர்வேக்ஷன்' விருதை பெற்றது. அதையொட்டி, இந்தூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் பங்கேற்ற பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா பரபரப்பான கருத்தை தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:-

"இந்தூர் நகரம் தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டதற்கான முதல் பெருமை, தூய்மை பணியாளர்களேயே சேரும். இரண்டாவது, நகர மக்களை சேரும். ஏனென்றால், அவர்கள் முன்னோர்களின் வளர்ப்பால் கலாசாரத்துடனும், ஒழுக்கத்துடனும் திகழ்கிறார்கள்.

எனவே, மக்கள்தான் காரணமே தவிர, அதிகாரிகள் அல்ல. ஆனால், மக்களை பாராட்டாமல், அதிகாரிகளை பாராட்டுகிறீர்கள். இது கசப்பானதாக இருந்தாலும், என்னை தவிர இதை சொல்லும் துணிச்சல் யாருக்கும் கிடையாது."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்