இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் மீது துப்பாக்கிச்சூடு - கைது
|இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் ஷாஹன்ஹர் பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து ஒரு நபர் இந்திய எல்லைக்குள் நுழைவதை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த துப்பாக்கிச்சூடில் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானியர் காயமடைந்தார்.
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர், எல்லைக்குள் அத்துமீறி நுழந்த பாகிஸ்தானியரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து அவரை கைது செய்து, மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
பிடிபட்ட பாகிஸ்தானியரிடம் விசாரணை நடத்தி, அவர் இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்தது உறுதியானால் அவரை மீண்டும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்க இந்திய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.