< Back
தேசிய செய்திகள்
பாஜக ஆட்சியில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறார்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

Image Courtesy: AFP 

தேசிய செய்திகள்

பாஜக ஆட்சியில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு விவசாயி தற்கொலை செய்கிறார்- காங்கிரஸ் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
20 Sep 2022 11:55 AM GMT

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு ஆளும் பாஜக ஆட்சியின் கொள்கைகளே காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார் என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 17 ஆம் தேதி புனேவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வெங்காயத்திற்கான குறைந்தப்பட்ச ஆதரவு விலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட், "தற்கொலை செய்து கொண்ட விவசாயி தனது தற்கொலைக் குறிப்பில், தனது மரணத்திற்கு பாஜக அரசின் கொள்கைகளே காரணம் என்று தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தன்னைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டு இருப்பதாகவும் அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்'" என்றார்.

தொடர்ந்து பேசிய சுப்ரியா ஷ்ரினேட் " 2021 ஆம் ஆண்டில் விவசாயிகள் 10 ஆயிரத்து 881 பேர் தற்கொலையால் இறந்துள்ளனர், இது கடந்த ஆண்டு நடந்த 1 லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலை இறப்புகளில் 6.6 சதவீதம் ஆகும்.

அதாவது ஒவ்வொரு நாளும் 30 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் இறக்கின்றனர்" என்று கூறினார்.

தேசிய குற்றப் பதிவுப் பணியகத் தரவை மேற்கோள் காட்டி பேசிய சுப்ரியா ஷ்ரினேட், 2014 முதல் 2021 வரை 53 ஆயிரத்து 881க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாகவும், தினசரி 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் செய்திகள்