< Back
தேசிய செய்திகள்
தன்னை தானே திருமண செய்து கொள்ளும் பெண்; வலுக்கும் எதிர்ப்பு
தேசிய செய்திகள்

தன்னை தானே திருமண செய்து கொள்ளும் பெண்; வலுக்கும் எதிர்ப்பு

தினத்தந்தி
|
4 Jun 2022 6:45 AM GMT

'சோலோகேமி' என்ற பெண்கள், தம்மை தாமே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வு முதன்முறையாக இந்தியாவில் நிகழ உள்ளது.

பரோடா

குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ). எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார்.

திருமணத்துக்கான பிரேத்யேக ஆடை மற்றும் அனைத்து சம்பிராதாயங்களும் இவருடைய திருமணத்தில் நடைபெறவுள்ளது. இவருடைய திருமணத்தில் பங்கேற்க சில உறவினர்களையும் இவர் அழைத்துள்ளார். இந்த திருமணத்தில் மணமகன் மட்டுமே இல்லையே தவிர மற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

பெண் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வு முதல்முறையாக குஜராத்தில் நடைபெறவுள்ளது.

தனது திருமணத்தின்போது சிவப்பு நிற மணப்பெண் அலங்காரத்தில், கைகளில் மருதாணி சகிதம், மணமகள் புனித அக்னியைச் ஏழு சுற்றுகள் சுற்றிவருவார் என்று பிந்து தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு முந்தைய சடங்குகளான மஞ்சள் கலந்த எண்ணெய் மணப்பெண்ணின் மீது தடவப்படும் மற்றும் இசை மற்றும் நடனம் போன்ற சடங்குகள் முன்னதாகவே நடைபெறும்.

இதுகுறித்து ஷாமா பிந்து கூறும்போது சிறு வயதில் இருந்தே திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று நினைத்தேன். திருமணம் எனும் பாரம்பரியம் என்னைப் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், நான் ஒரு மணமகளாக வேண்டும் என விரும்பினேன். அதனால், என்னை நானே மணந்துகொள்ள முடிவு செய்தேன்.

இது சோலோகேமி என அழைக்கப்படுகிறது. ஒரு வெப்சீரிஸில் நடிகை ஒருவர் , எல்லா பெண்களும் மணமகளாக விரும்புகிறார்களே தவிர மனைவியாக அல்ல என பேசியிருப்பார். இதைக் கேட்டவுடன் என்னை நானே மணந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்கு மீண்டும் தோன்றியது.

இதுபோன்று இந்தியப் பெண்கள் யாராவது திருமணம் செய்திருக்கிறார்களா என்று ஆன்லைனில் தேடிப் பார்த்தேன். ஆனால், யாரும் அப்படி செய்துகொள்ளவில்லை. திருமணத்தைப் புனிதமாகக் கருதும் இந்திய நாட்டில் தன்னைத் தானே திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் நானாகத்தான் இருப்பேன் என நினைக்கிறேன்.

பெண்கள் தாங்கள் விரும்புபவரை திருமணம் செய்து கொள்வார்கள். இந்த திருமணம் மூலம் என்னை நானே காதலிக்கப் போகிறேன். என்னுடைய பெற்றோர் இந்தத் திருமணத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

அவர்களுக்கும் இதில் மகிழ்ச்சிதான். எனது மெஹந்தி நிகழ்ச்சி ஜூன் 9ஆம் தேதியும், திருமணம் ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கும் நடைபெறவுள்ளது என்றார்.

திருமணம் முடிந்த பின்னர் இரண்டு வாரம் ஷாமா ஹனிமூனுக்கு கோவாவுக்கும் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த சுய திருமணத்துக்கு உள்ளூர் பா.ஜனதா தலைவர் சுனிதா சுக்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுனிதா, ஷாமா பிந்து தன்னைத் தானே திருமண செய்வதாக அறிவித்துள்ளார். இத்தகைய திருமணங்கள் இந்து மதத்திற்கு எதிரானது. மேலும் அவர் கோயிலில் திருமணம் செய்வதாக அறிவித்துள்ளார். அதற்கு அனுமதி வழங்க முடியாது. சுய திருமணம் செய்தால் இந்துக்களின் மக்கள் தொகையில் சரிவு ஏற்படும். மதத்திற்கு எதிராக சென்றால் சட்டம் ஒழுங்கே இருக்காது என்று கூறியுள்ளார்.

இது குறித்து ஷாமா பிந்து கூறியதாவது:-

நம் நாட்டில் தன்னைத் தானே நேசிக்கும் நபருக்கு உதாரணமாக நான் இருக்கலாம். மக்கள், தாங்கள் நேசிக்கும் நபரை திருமணம் செய்கின்றனர். நான் என்னையே நேசிக்கிறேன். அதனால்தான் இந்த திருமணம். சுய திருமணத்தை சிலர் அர்த்தம் இல்லாததாக கருதலாம். எனக்கு என் விருப்பம் முக்கியம். எனது பெற்றோரும், எனது திருமணத்துக்கு திறந்த மனதுடன் ஆசி வழங்கியுள்ளனர்" என்றார்.


தன்னைத்தானே "திருமணம் செய்துகொள்வது" என்ற எண்ணம், ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு முன்னர், செக்ஸ் எண்ட் தி சிட்டி என்ற மிகப் பிரபலமான அமெரிக்க நகைச்சுவை நாடகத் தொடரில் காட்டப்பட்டது.

இதனையடுத்து, இதுபோன்ற நூற்றுக்கணக்கான "திருமணங்கள்" நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் அசாதாரணமான ஒரு நிகழ்வாக, 33 வயதான பிரேசிலிய மொடல் என்ற அழகியல்துறை பெண், தனது "திருமணத்திற்கு" மூன்று மாதங்களுக்குப் பின்னர் தன்னை, தானே "விவாகரத்து" செய்தமை அமைந்திருந்தது.

தன்னை, தானே திருமணம் செய்துக்கொள்ளும் முறை, "ஒரு வினோதமான மற்றும் சோகமான செயல்" என்று விமர்சித்தனர்.

சிலர் இது "நாட்பட்ட நாசீசிசம்" என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தநிலையில் . நீ தனியாக உலகிற்கு வந்தாய், உன்னை நீ தனியாக விட்டுவிடுகிறாய். அப்படியானால் உன்னை விட உன்னை யார் அதிகமாக நேசிக்க முடியும்? நீங்கள் விழுந்தால், உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள வேண்டும். என்பதே இந்திய பெண்ணான பிந்துவின் சொந்தக்கருத்தாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்