< Back
தேசிய செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்.!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம்.!

தினத்தந்தி
|
14 Oct 2023 5:48 PM GMT

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை முதல் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. இதில் கடந்த செப்டம்பர் 18-ம்தேதி முதல் 26-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிலையில், நாளை (15-ஆம் தேதி) முதல் 23-ம் தேதி வரை 9 நாட்களுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு கொடியேற்றமும், கொடி இறக்க நிகழ்ச்சிகளும் கிடையாது. மேலும் தேர்த் திருவிழாவும் நடைபெறாது. அதற்கு பதிலாக தங்கத் தேரோட்டம் மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரி பிரம்மோற்சவ விழாவினையொட்டி, இன்று ஏழுமலையான் கோயிலில் அங்குரார்ப்பண நிகழ்ச்சிகள் வைகானச ஆகம விதிகளின்படி நடத்தப்பட்டன. மாலை விஸ்வகேசவர் என்றழைக்கப்படும் ஏழுமலையானின் சேனாதிபதி 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை பார்வையிட்டார். அதன் பின்னர், நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து வரும் 22-ம் தேதி வரை காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் வாகன சேவைகள் நடைபெற உள்ளன. 23-ம் தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இத்துடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது.

மேலும் செய்திகள்