< Back
தேசிய செய்திகள்
ஜூன் 4-ல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம்; எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ. அமைப்புகள் அறிவிப்பு
தேசிய செய்திகள்

ஜூன் 4-ல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம்; எஸ்.எப்.ஐ., டி.ஒய்.எப்.ஐ. அமைப்புகள் அறிவிப்பு

தினத்தந்தி
|
31 May 2023 1:40 PM GMT

வருகிற ஜூன் 4-ல் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என எஸ்.எப்.ஐ. மற்றும் டி.ஒய்.எப்.ஐ. அமைப்புகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

திருவனந்தபுரம்,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான, பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிராக, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்களை வென்று தந்த வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா மற்றும் சாக்சி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு கூறி கடந்த ஜனவரி 18-ந்தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சரண் சிங்குக்கு எதிராக 3 மாதங்களுக்கு பின்னர், கடந்த ஏப்ரல் 23-ந்தேதியில் இருந்து மீண்டும் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. அவர்களுக்கு ஆதரவாக, அரியானா, பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாய சங்க தலைவர்கள் பலர் தங்களது ஆதரவை வழங்கினர்.

போராட்டத்திற்கு அரியானா உள்துறை மற்றும் சுகாதார மந்திரியான அனில் விஜ் தனது ஆதரவை வெளிப்படுத்தினார். அவர்கள் சார்பில், நடுநிலையாளராக செயல்பட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் தனது விருப்பத்தினையும் அவர் வெளியிட்டு, அவர்களுக்கு உறுதி கூறினார். இதுதவிர, மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் கூறும்போது, பாரபட்சமின்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என கூறினார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன், பிரிஜ் பூஷண் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், நார்கோ சோதனை, பாலிகிராப் சோதனை அல்லது உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயார் என தெரிவித்து உள்ளார். இதேபோன்று, பஜ்ரங் பூனியா உள்ளிட்டோரும் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாராகவே இருக்கிறோம் என தெரிவித்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் நோக்கிய அவர்களது பேரணியின்போது, டெல்லி போலீசார் கைது செய்து, அவர்களை இழுத்து சென்றது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு உலக மல்யுத்த சம்மேளனம் கண்டனம் வெளியிட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ஒலிம்பிக் உள்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீச போகிறோம் என கூறி நேற்று அவர்கள் சென்றனர். பின்னர், விவசாய சங்க தலைவர் திகாயத் தலையிட்டு, 5 நாள் காத்திருக்கும்படி அவர்களிடம் கேட்டு கொண்டார்.

இந்நிலையில், டெல்லி போலீசார் தரப்பில் இன்று வெளியிட்ட செய்தியில், எங்களது அறிக்கை இன்னும் 15 நாட்களில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அது குற்றப்பத்திரிகையாகவோ அல்லது இறுதி அறிக்கையாகவோ கூட இருக்கும் என தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், இந்திய ஜனநாயக இளைஞர் சம்மேளனம் (டி.ஒய்.எப்.ஐ.) மற்றும் இந்திய மாணவர் அமைப்பு (எஸ்.எப்.ஐ.) ஆகியவை மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக கூட்டாக இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

அந்த அறிக்கையில், பிரிஜ் பூஷணை உடனடியாக கைது செய்ய வேண்டும் என எஸ்.எப்.ஐ. மற்றும் டி.ஒய்.எப்.ஐ. வலியுறுத்துகிறது. மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு எதிரான அனைத்து பொய்யான வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

இந்த போராட்டம் வழியே, மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட போலீஸ் வன்முறைக்கு, பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என டி.ஒய்.எப்.ஐ. அமைப்பின் தேசிய தலைவர் ஏ.ஏ. ரகீம் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்